பி.எம். கேர்ஸ் திட்ட உதவி

குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று (மே 30) காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் அளிப்பார். இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்படும். மார்ச் 11, 2020 முதல் பிப்ரவரி 28, 2022 வரை கோவிட் பெருந்தொற்று காரணமாக பெற்றோர்கள் ஒருவரையோ, இருவரையோ அல்லது சட்டரீதியான பாதுகாவலரையோ, அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ, அல்லது தத்தெடுத்த ஒற்றை பெற்றோரையோ இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம் மே 29, 2021 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு, உறைவிட வசதி, கல்வி, உதவித்தொகை, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை உறுதி செய்தல் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.