அண்ணாமலைக்கு அடுத்த மிரட்டல்

தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சொந்த ஊரான கரூர் மாவட்டத்தை விட்டு அண்ணாமலை தாண்ட முடியாது என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை ஒரு சில நாட்களுக்கு முன் மிரட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, ‘தி.மு.க. ஆட்சியில் ரௌடிகள்தான் அமைச்சர்களாக உள்ளனர் என்பதற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் நல்ல உதாரணம். இவர், என்ன பேரிகார்டு போட்டு தடுக்கும் செக்யூரிட்டி வேலையா பார்க்கிறார்? நெஞ்சில் துணிவிருந்தால் கரூரில் வந்து என்னை தடுக்கட்டும். பின்னர் என்ன நடக்கிறது என்பது அமைச்சருக்கு தெரியும்’ என்றார். இந்நிலையில் தற்போது, நாகை மாவட்டம் கீழ்வேளூரில் தி.மு.க.வின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திராவிட இயக்கத் தமிழ்ப் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன், “தருமபுரத்தில் பட்டினப்பிரவேசம் சிறப்பாக நடைப்பெற்று முடிந்துள்ளது. இதனால் நாட்டுக்கு என்ன நடந்தது? அண்ணாமலை வேண்டுமானால் பல்லக்கு தூக்குவதற்கு தயாராக இருக்கலாம். ஆனால், கெடு விதிப்பதற்கு உரிமை இல்லை. அண்ணாமலைக்கு தி.மு.கவினர் கெடு வைத்தால், திரண்டு எழுந்தால் 72 மணி நேரத்தில் அண்ணாமலை கூட்டத்தில் பேசுவதற்கும், கேட்பதற்கும் ஆள் இருக்கமாட்டார்கள்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.