மெட்ரோ ரயில் தடை கோரி வழக்கு

சென்னையைச் சேர்ந்த ஜி.கவுதமன், பி.ஆர்.ரமணன், எஸ்.விஜய் நாராயணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை மெட்ரோ ரயில் 4ம் திட்டப்பணிகளாக சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை ரயில் பாதை அமைக்கப்படவுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வழித்தடத்தில் மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோயில், வடபழனியில் முருகன் கோயில், வெங்கீஸ்வரர் கோயில், அழகர் பெருமாள் கோயில், விருகம்பாக்கத்தில் சுந்தர வரதராஜப்பெருமாள் கோயில், வளசரவாக்கத்தில் வேல்வீஸ்வரர் கோயில், பூந்தமல்லியில் வரதராஜப் பெருமாள் கோயில் குளம் ஆகியவை உள்ளன. இந்த வழித்தடத்தில் உள்ள சாந்தோம் தேவாலயம், ரோசரி தேவாலயம் உள்ளிட்டவை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகளுக்கு பரிசீலிக்கப்பட்டுள்ளன. ஆனால் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த புராதனச் சிறப்புமிக்க இந்த 7 கோயில்களும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகளுக்கு பரிசீலிக்கப்படவில்லை. எனவே,  இந்த கோயில்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். மேலும், பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும் இடம் கோயிலுக்கு அருகே இருப்பதால் தேர்த்திருவிழா உள்ளிட்ட கோயில் உற்சவங்களுக்கு பாதிப்பு ஏற்படும். மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும்போது அரசு மற்றும் தனியார் நிலங்களை விட்டுவிட்டு கோயில் நிலங்களே கையகப்படுத்தப்படுகிறது. எனவே, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் உள்ளிட்ட 7 கோயில்களையும் புராதனக் கோயில்களாக அறிவிக்க வேண்டும். கோயில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்’ என கோரியுள்ளனர்.