மசூதியில் காவிக் கொடியேற்றம்

நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீராம நவமி உற்சாகமாக ஹிந்துக்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பிஹாரின் முசாபர்நகர் மாவட்டத்தின் முகமத்பூர் கிராமத்தில் நடந்த ஸ்ரீராம நவமி ஊர்வலத்தின்போது அங்கிருந்த ஒரு மசூதியின் மேல் காவிக் கொடி ஒன்று ஏற்றப்பட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது. இதற்கு பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “இதுபோன்ற செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், இதற்கு பா.ஜ.க காரணம் எனக் கூறுபவர்கள் மண்டைக்குள் மூளையை வைக்க வேண்டும். இது அல்ல பா.ஜ.க. எங்கள் கட்சி இதனை ஊக்குவிப்பதில்லை. எங்களின் பிரதமர் மோடி சமத்துவம், வளம், நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.