மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

கேரள மாநிலம் ஆலப்புழையில் 4 ஏப்ரல் 1855ல் பிறந்தவர். தந்தையிட்மே தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சமய நூல்களையும் தமிழ் இலக்கியங்களையும் கற்றார். நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளை இவரது தமிழ் ஆசிரியர். கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின் சீடர் இவர். சட்டாம்பி சுவாமிகள், தைக்காட்டு அய்யாவு சுவாமி, நாராயண குரு ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். 1876ல் பி.ஏ. பட்டம் பெற்றார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச் சாலையின் தலைவராக 2 ஆண்டுகள் பணியாற்றினார்.அது பின்னர் இந்துக் கல்லூரியாக அது உயர உறுதுணையாக இருந்தார். திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் தத்துவத் துறை ஆசிரியராகச் சேர்ந்தார். எம்.ஏ. தத்துவத்தில் பட்டம் பெற்றார். மகாராஜா அரண்மனையின் வருவாய்த் துறை தனி அலுவலராகவும் நியமிக்கப்பட்டார். மகாராஜா கல்லூரி பேராசிரியர் ஹார்வியின் அன்புக்குரிய மாணவராகத் திகழ்ந்தார். 1885ல் அதன் தலைமைப் பேராசிரியரானார். இறுதிவரை அங்கு பணியாற்றினார்.

சிறந்த படைப்பாளி. பாரத, மேற்கத்திய தத்துவம் தவிர, வரலாறு, தொல்பொருளியல், இலக்கியம், நவீன அறிவியல் ஆகிய துறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ‘நூற்றொகை விளக்கம்’, ’திருவிதாங்கூர் பண்டைய மன்னர்கால ஆராய்ச்சி’ உட்பட 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.‘மனோன்மணியம்’ என்ற நூலை 1891ல் எழுதினார். கவிதை நாடக வடிவில் அமைந்த மனோன்மணியம், 4,500 வரிகள் கொண்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த’ எனத் தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தமிழக அரசு 1970ல் அறிவித்தது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் (திருஞான சம்பந்தரின் காலம்)’ என்ற ஆங்கில நூலை எழுதினார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதினார். பத்துப்பாட்டின் 3 அங்கங்களான திருமுருகாற்றுப்படை, நெடுநல் வாடை, மதுரைக் காஞ்சி ஆகியவற்றை ‘தி டென் தமிழ் ஐடியல்ஸ்’ என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘ஜீவராசிகளின் இலக்கண மும் பிரிவும்’, ‘மரங்களின் வளர்ச்சி’, ‘புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும்’ ஆகிய அறிவியல் நூல்களை எழுதினார். கல்வெட்டு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். திருவிதாங்கூர் அரசர்களின் மரபு பற்றி ஆராய்ந்து எழுதிய நூலை 1894ல் வெளியிட்டார். திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையைத் தோற்றுவித்து சமயத் தொண்டும் ஆற்றி வந்தார். தமிழின் பல களங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கிய பெ.சுந்தரம் பிள்ளை, 1897 ஏப்ரல் 26ல் 42வது வயதில் மறைந்தார்.