தேர்வை பண்டிகையாக கொண்டாடுங்கள்

பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் பயமில்லாமல் தைரியமாக தேர்வை எதிர்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் ‛பரிக்ஷா பே சர்ச்சா’ எனப்படும் தேர்வுக்குத் தயாராகுங்கள் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள டல்கோத்ரா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். அப்போது அவர், ‘தேர்வு என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம். மாணவர்கள் தேர்வின் போது பதற்றமடைவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். நீங்கள் எதை செய்தாலும் முழு நம்பிக்கையுடன் செய்து கொண்டே இருங்கள். பல்வேறு பண்டிகைகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வுகள் வர இருக்கின்றன. தேர்வை நாம் ஒரு பண்டிகையாக கொண்டாடத் தொடங்கினால், அதில் பல வண்ணங்கள் நிறைந்திருக்கும். உங்கள் பலவீனங்களை பலமாக ஆக்குங்கள்.

ஆன்லைன் கல்வியானது அறிவை அடைவதற்கான கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. ஆன்லைனில் படிக்கும் போது உண்மையில் படிக்கிறீர்களா அல்லது சமூக ஊடகங்களை பார்த்து நேரத்தை செலவிடுகிறீர்களா என்பதை மாணவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதே சமயம் நேரடி கல்வியானது அந்த அறிவை நிலைநிறுத்துவது மற்றும் நடைமுறையில் அதை மேலும் செயல்படுத்துவது பற்றியது. 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை மேம்படுத்தியுள்ளோம். கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் அதைப் பற்றி ஆலோசித்தோம். காலத்திற்கு ஏற்றார்போல் நாம் மாற வேண்டும்.

தொழில்நுட்பம் ஒரு சாபக்கேடு அல்ல, அதை திறம்பட பயன்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் தொழில்நுட்ப திறமைகளைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் பல தொழில்நுட்ப செயலிகளை உருவாக்கலாம். இன்று மாணவர்கள் வேத கணிதத்திற்கான 3டி பிரிண்டர்களை உருவாக்கி வருகின்றனர். அவர்கள் தொழில்நுட்பத்தை திறமையாகப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு மாணவர்களுக்கும் சிறப்பு திறமை இருக்கிறது.

நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு ஆசிரியர்களும் பெற்றோரும் அழுத்தம் கொடுப்பதாக மாணவர்கள் உணரக் கூடாது. பெற்றோர் தங்கள் கனவுகளை குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது. அவர்கள் தங்கள் எதிர்காலத்தை சுதந்திரமாக தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். நேர நெருக்கடியால் பல மாணவர்களின் கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க முடியவில்லை. மாணவர்களின் கேள்விகளுக்கு வீடியோ அல்லது ஆடியோ மூலமாக நமோ செயலி வாயிலாக பதிலளிப்பேன்’ என பேசினார்.