திக்விஜய் சிங்குக்கு ஓராண்டு சிறை

முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங் முன்னாள் எம்.பி. பிரேம்சந்த் குட்டு உட்பட 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து இந்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2011ஜூலை 17ல், திக்விஜய் சிங் உஜ்ஜையினியில் உள்ள ஓட்டல் ஒன்றின் திறப்பு விழாவுக்குச் சென்றிருந்தார். அவருக்கு பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டினார்கள். அதையடுத்து திக்விஜய் சிங்கின் ஆதரவாளர்கள் பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்களை தாக்கினர். இந்த வழக்கு விசாரணையில்தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என திக்விஜய் சிங் கூறியுள்ளார்.