அழுக்கு எங்கே உள்ளது?

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். அதை பார்த்துக் கொண்டே இருந்த மனைவி, “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்” என்று சொன்னாள். கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால், மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள். திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள், “அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா அல்லது நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை? இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன என்றாள்.

கணவன் அமைதியாக “இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்” என்று அமைதியாக சொன்னான்.

பல இடங்களில் இப்படித்தான் பெரும்பாலும் நடக்கிறது. நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன. ஆனால் ஏனோ நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை? ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை.

மற்றவர்களின் குறைகளை குற்றம்  காண்பதற்கு முன் முதலில் நம்மை பரிசோதிப்பது மிகவும் நல்லது…