உண்மையை சொன்னால் ஃபத்வா

இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி  இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. சில நாட்களுக்கு முன் வெளியான இப்படம் தற்போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்றால் மிகையல்ல. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. படத்தின் இணை தயாரிப்பாளரும், நடிகையுமான பல்லவி ஜோஷி  நியூஸ் 18க்கு அளித்த பேட்டி ஒன்றில், “காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்காக எனக்கும் என் கணவர் விவேக் அக்னிஹோத்ரி  மீதும் ஃபத்வா (தடை) விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்தப் படத்திற்காக அர்ப்பணித்த நான்கு ஆண்டுகளில், படப்பிடிப்பு நடத்தியது என்னவோ ஒரு மாதம் மட்டுமே. ஆனால், இது குறித்த ஆராய்ச்சி, மக்களைச் சென்றடைவது, படத்திற்கு பணம் திரட்டுவது, நடிகர்களை வரவழைப்பது என எல்லாமே மிகப்பெரிய சவாலாக இருந்தது. நாங்கள் காஷ்மீரில் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோதுதான் எங்கள் பெயர்களில் ஃபத்வா வெளியிடப்பட்டது.  இதை அறிந்ததும் நான், விவேக்கிடம், இந்தக் காட்சியை சீக்கிரம் முடித்துவிட்டு இங்கிருந்தே விமான நிலையத்திற்கு  கிளம்புவோம். வேறு எதுவும் வெளியில் சொல்ல வேண்டாம். இப்போதே அனைத்து படப்பிடிப்புகளையும் முடித்து விடுங்கள். ஏனெனில் நாம் மீண்டும் இங்கு வருவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்று சொன்னேன்” என தெரிவித்தார்.