தேவையற்ற தீர்மானம்

‘நீட்’ தேர்வு குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சபாநாயகருக்கே ஆளுனர் திருப்பி அனுப்பிவிட்டார். இந்நிலையில், சட்டசபை சிறப்புக் கூட்டம் நடத்தி திருப்பி அனுப்பப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்தி மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக அறிவித்துள்ளீர்கள். ‘நீட்’ தேர்வு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டு விட்டது. அதில் ஒரு மாநிலத்துக்கு விலக்கு பெறுவது இயலாதது. அது தெரிந்திருந்தும், உங்களுடைய அரசியலுக்கு ஆளுனரையே ஆயுதமாகவும், கேடயமாகவும் பயன்படுத்தி, தமிழக மக்களை பலிகடா ஆக்க நினைப்பது நியாயம் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்களும் நீட்டில் தேர்ச்சி பெற்று அதிக இடங்களைப் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் 500க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் இடம்பிடிக்கின்றனர். வேலையில்லா திண்டாட்டம், கொலை, தற்கொலை, மதமாற்றங்கள் என எண்ணற்ற பிரச்னைகள் தமிழகத்தில் இருக்க, ‘நீட்’ தேர்வை மட்டும் வைத்து தொடர்ந்து அரசியல் செய்வது எந்தவிதத்திலும் நியாயம் அல்ல’ என தெரிவித்துள்ளார்.