ஆரஞ்சு பழமும் நாத்திகனும்

அவன் ஒரு கடைந்தெடுத்த நாத்திகன். மேடைதோறும் பிரசங்கிக்கிறான். அவன் பிரசங்கம் செய்தால் பிணம் கூடத் துடிக்கும் என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள். ‘கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள், தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள் இவை’ என்று வாய்ஜாலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள். கடைசியாக கடவுளுமில்லை. கத்திரிக்காயுமில்லை எல்லாம் பித்தலாட்டம் எனச் சொல்லி முடித்துவிட்டு, யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்றும் அழைத்தான்.

அந்நகரில் எல்லோருக்கும் தெரிந்த பெரிய குடிகாரன் ஒருவன் மேடைமீது ஏறினான். தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து தோலை மெதுவாக உரித்தான். கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபங் கொண்டான் நாத்திகன்.

பழத்தை உரித்தவன் சுளைகளைத் தின்று கொண்டே”பொறு பொறு” என்று சொல்லி தின்று முடித்தான். பிறகு நாத்திகனை நோக்கி,

பழம் இனிப்பாய் இருக்கிறதா? எனக் கேட்டான். பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா இல்லை புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்? என்றான் நாத்திகன்.

கடவுள் யார், அவர் எப்படிபட்டவர், அவரின் ஆற்றல் என்ன, என்பதை நீ பக்தி அல்லது ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு பார்த்தால்தானே உனக்குத் தெரியும்? இப்போது நான் சாப்பிட்ட ஆரஞ்சு பழத்தின் சுவையை பற்றியே உன்னால் தெரிந்து கொள்ள முடியாதபோது

பல ஆயிரம் வருடங்களாக நம் மூதாதையர் சித்தர்கள் ஞானிகள் வணங்கி வழிபட்டு நமக்கு வழிகாட்டி பாரம்பரியமாக கொண்டாடிவரும்

கடவுளை இல்லை என்று எவ்வாறு சொல்லுவாய்? இன்றைய காலகட்டத்திலே தன்னுணர்வு அடைந்த பல ஞானிகளின் சிந்தனைகளை புரிந்து கொள்ளாத நீ, இறைவனை உணர்ந்து அனுபவித்து ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்? என்றான் அந்த குடிகாரன்.

கூடி இருந்த ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஒரு பெரிய கூட்டமே செம்மறி ஆடுபோல நாம் சொன்னதை வாயைப் பொத்தி கேட்டுக் கொண்டிருக்க, இந்த குடிகாரப்பயல் நம்மையே மடக்கிவிட்டானே என நாத்திகன் தலைகுனிந்துச் சென்றான்.