ஹெச். ராஜா குற்றச்சாட்டு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி பா.ஜ.க சார்பில் நல்லாட்சி தின கருத்தரங்கு மதுரையில் நடந்தது. பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா இதில் கலந்துகொண்டு பேசுகையில், தங்க நாற்கர திட்டம், அணு ஆயுத சோதனை உள்ளிட்ட வாஜ்பாயின் நல்லாட்சி சாதனைகள், தற்போது பிரதமர் மோடியின் ஆட்சியில் நடைபெறும் சாதனைகளையும் தமிழுக்கும் தமிழகத்திற்கும் செய்துவரும் பணிகளையும் பட்டியலிட்டார். மேலும், கொரோனாவிற்கு இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை கொண்டு வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் இத்திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றும்போது பிரதமரின் படம் இடம் பெறுவதில்லை. கருணாநிதியின் படம்தான் இடம் பெறுகிறது. தி.மு.கவினர் மத்திய அரசு திட்டங்களில் அவர்களின் ஸ்டிக்கரை ஒட்டுகின்றனர். தி.மு.கவால் நல்லாட்சியை தர முடியாது. செயல்படுத்தப்படுவது அனைத்தும் மோடியின் திட்டம். மதுரை விமான நிலையம் ஏற்கனவே சர்வதேச விமான நிலையமாக உள்ளது. இது தெரியாமல் அதை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்கிறார் மதுரை எம்.பி வெங்கடேசன். உலக நாடுகளிடம் பாரதம் கையேந்திய காலம் போய், அந்நாடுகளுக்கு கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.