பா.ஜ.க எம்.எல்.ஏவை கொல்ல சதி

கர்நாடக மாநிலம் பெங்களூரு காங்கிரஸ் பிரமுகர் கோபாலகிருஷ்ணா கடந்த தேர்தலில் எலஹங்கா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் அவர், தனது ஆதரவாளர் குள்ளா தேவராஜிடம் ‘எலஹங்கா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ எஸ்.ஆர். விஷ்வநாத்தை முடிக்க (கொல்ல) ஒரு கோடி ரூபாய் ஆகுமா? நான் பணம் கொடுக்கிறேன். வேலையை ரகசியமாக முடித்து விடு’ என கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜக எம்.எல்.ஏ விஷ்வநாத் கர்நாடக உள்துறை அமைச்சரிடம் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும். கோபாலகிருஷ்ணா, குள்ளா தேவராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உள்துறை அமைச்சர் இதுகுறித்து விசாரிக்க பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். காவல்துறை, குள்ளா தேவராஜிடம் விசாரணை நடத்தியபோது, அந்த வீடியோ 5 மாதத்துக்கு முன்பு எடுக்கப்பட்டது. தேர்தலில் தோல்வி அடைந்த கோபத்தில் அப்படி கூறினார்’ என்று கூறியுள்ளார். விரைவில் கோபாலகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.