இல்லற இரகசியம்

ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது. ‘ஐயா! ஆயிரம் காத தூரம் கடல் மீது பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்’, என்றது. ‘பறவையே! முயற்சிப்பதில் தவறில்லை. பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக திரும்பி விடு’, என்றார் சாது. தலையசைத்து விட்டு பறந்தது பறவை. பின்னர் சீடனிடம் ‘சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்’, என்றார் சாது.

ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது. ‘ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன் சோர்வடைந்தேன்.   நீங்கள் சொன்னபடி திரும்பிவிட்டேன். இல்லையெனில் கடலில் விழுந்திருப்பேன். சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர்வேன்’, என்றது.

‘பறவையே! இம்முறை உன் துணையையும் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார் சாது. பத்து நாட்களுக்குப் பிறகு பறவைகள் திரும்ப வந்தன. ‘ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் பறக்க முடிந்தது. இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள்’, என்றது பறவை.

சாது, ஒரு குச்சியை பறவையிடம் கொடுத்து, ‘பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்பட்டால் இந்தக் குச்சியை கடல் தண்ணீரில் போடுங்கள். அது மிதக்கும். அக்குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறக்கலாம்’, என்றார்.

பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன. ‘ஐயா! உங்களின் ஆசியால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்’, என்றது பறவை.

‘அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?’ என்று கேட்டார் சாது. ‘ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. சில இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது. ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும்போதுதான் “குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”, என்ற உண்மை புரிந்தது’, என்று சொல்லிச் சென்றது பறவை.

சாது சிரித்துக்கொண்டே, ‘சீடனே! பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்தபோது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது. அதற்குக் காரணம் ‘துணை’. ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை. இலக்கை அடைய ‘குச்சி’ என்ற கருவி அவசியமாகிறது. அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது. ஆனால், அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது.

பறவைகளுக்கு ‘குச்சியை’ போல மனிதர்களுக்கு ‘இல்லறம்’ கருவியாகிறது. ‘சம்சார சாகரம்’, என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதித்து நீந்த வேண்டியதில்லை. ‘இல்லறம்’ என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம். கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில் இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது. அதுவே இல்லற ரகசியம் என்று சொன்னார் சாது.