இது விழிப்புணர்வா பயமா?

கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் திடீர் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி மொத்த பாரதத்தையே உலுக்கியது. யாருக்கும் தெரியாமல் அவர் செய்த பல நல்ல செயல்கள், உதவும் குணம் போன்ற பல விஷயங்கள் அவரின் மரணத்தின் பிறகு வெளிச்சத்திற்கு வந்தன.

இது ஒருபுறம் இருக்க மற்றொரு நிகழ்வாக, தற்போது தேசமெங்கும் மருத்துவமனைகளில் தங்கள் இருதயத்தை பரிசோதித்துக்கொள்ள பலர் குறிப்பாக இளைஞர்கள் படையெடுக்கத் துவங்கிவிட்டனர். குடும்பத்தில் மாரடைப்பு உள்ளிட்ட ஆபத்து காரணிகள் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைபிடித்தல், அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் என அனைவரும் பயத்தால் குவிவதால் மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவு 25 சதவீதம் அதிக நோயாளிகள் வருகையை பதிவு செய்துள்ளன.

மேலும், புனித் ராஜ்குமார் தனது வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தற்போது இளைஞர்களிடையே ஜிம்கள் குறித்து எதிர்மறையான கருத்துக்களும் அதிகமாக பரவி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜிம்மிற்கும் மாரடைப்புக்கும் சம்பந்தம் இல்லை, அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியும் நல்லதல்ல, இருதய பிரச்சனைகள் தொடர்பான மார்பு வலியும் சாதாரண மார்பு வலியும் வேறுபட்டது, மாரடைப்பைத் தடுக்க சரியான உணவுமுறையுடன் வாழ்க்கைமுறையும் அவசியம், பரிசோதனை நல்லதுதான் ஆனால் வீண் பயம் வேண்டாம். அனைத்தையும்விட மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.