தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

சர்வதேச கச்சா எண்ணை விலை உயர்வு, பெட்ரோல் டீசலுக்காக கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வாங்கப்பட்ட பல லட்சம் கோடி கடன், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, இலவச தடுப்பூசி, இலவச உணவு தானியங்கள், தேச பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைக்க முடியாமல் இருந்த பெட்ரோல் டீசல் விலையை, மத்திய அரசு, பொதுமக்களின் நலன் கருதி தற்போது பெட்ரோலுக்கு குறைத்த ரூ. 5, டீசலுக்கு ரூ. 10 என கணிசமாக குறைத்துள்ளது. இதனையடுத்து உத்தர பிரதேச அரசு மேலும் ரூ. 12 குறைத்துள்ளது. இதேபோல, புதுச்சேரி, கர்நாடகா, அசாம், கோவா, திரிபுரா, உத்தராகண்ட் உள்ளிட்ட மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீது தலா ரூ. 7 குறைத்துள்ளன. ஆனால், தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு, அதுதான் ஏற்கனவே பெட்ரோல் விலையை 2 ரூபாய் தாராளமாக குறைத்துவிட்டோமே என கருதி இதுவரை வாய் திறக்காமல் உள்ளது. பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி பெட்ரோல் டீசல், எரிவாயு விலைகளை குறைக்கவில்லை, ஜி.எஸ்.டிக்குள்ளும் அவற்றை கொண்டுவர மனமில்லை, எரிவாயு மானியத்தையும் தருவதாக இல்லை. இப்படி, ஆட்சியில் இல்லாதபோது ஒன்றாக பேசுவதும் ஆட்சிக்கு வந்த பிறகு வேறொன்றாக செயல்படுவதும் தி.மு.கவிற்கு வாடிக்கைதான் என்பது அதன் முந்தைய வரலாறு. தாங்கள் சிறிதும் மாறவில்லை என்பதை ஸ்டாலின் தலைமையிலான இன்றைய தி.மு.கவும் மெய்ப்பித்து வருகிறது.