அஜித் பவார் சொத்துகள் முடக்கம்

மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில், மாநில கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்த சர்க்கரை ஆலை கடந்த 2010ல் குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டது. அன்று கூட்டுறவு வங்கியின் இயக்குநர்களில் பிரதான உறுப்பினராக இருந்தவர், தற்போதை துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான அஜித் பவார். அந்த ஆலையை வாங்க பயன்படுத்தப்பட்ட நிதியில் பெரும்பங்கு அஜித்பவாருக்கு சொந்தமான ‘ஸ்பார்க்லிங் சாயில் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது. இந்த ஆலையை வைத்து வங்கிகளில் பல கோடி கடனும் ரூபாய் பெறப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ரூ. 65.75 கோடி மதிப்பிலான அந்த சர்க்கரை ஆலையை முடக்கினர். வரி ஏய்ப்பு புகாரில் அஜித் பவாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களிலும் சோதனை நடத்தினர். இந்நிலையில், தற்போது மும்பையின் நாரிமன் பாயின்ட் பகுதியில் உள்ள நிர்மல் டவர் உள்ளிட்ட அஜித் பவாருக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 5 சொத்துகள் முடக்கப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.