புதிதாக ஐந்து இடங்கள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள், கட்டடங்கள், கோயில்களை தொல்லியல் துறை, பாரம்பரிய நினைவு சின்னங்களாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரத்தில் 12, மதுரையில் 16, விழுப்புரத்தில் 11, திருச்சியில் 7, வேலுாரில் 6, தஞ்சை, திருவண்ணாமலையில் தலா 5, தூத்துக்குடியில் 4, நெல்லையில் 3, திருவள்ளூரில் 3, அரியலுாரில் 3, கடலுார், திண்டுக்கல், கரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, கரூரில், தலா 2 மற்றும் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தலா ஒன்று என 89 இடங்கள் பாரம்பரிய நினைவு சின்னங்களாக பாதுகாக்கப்படுகின்றன. இந்நிலையில், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, முதலைக்குளம், விழுப்புரம் மாவட்டம் முதுண்டூர், தர்மபுரி மாவட்டம் நகனம்பட்டி, சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி ஆகிய ஐந்து இடங்களில் உள்ள பழமையான கல்வெட்டுகளை தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி அறிக்கை அனுப்பியுள்ளனர். எனவே, இவை விரைவில் பாரம்பரிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.