தாலிபன்களின் கமாண்டோ படை

தலிபன்கள் ஆப்கானிஸ்தானை விழுங்கிய பிறகு அதன் தலைநகர் காபூலின் பாதுகாப்பை தாலிபன்களின் ‘பத்ரி 313’ எனப்படும் கமாண்டோ பிரிவு தான் கவனித்துகொள்கின்றன. தலிபன்கள் என்றாலே நமது நினைவுக்கு வருவது கையில் ஏகே 47 துப்பாக்கியுடன் நீண்ட குர்தா உடையுடன் நீண்ட தாடி உடையர்கள் தான். ஆனால் இந்த பத்ரி 313 படைப் பிரிவில் உள்ள தாலிபன்களை பார்த்தால் நம் எண்ணத்தை மாற்றிக்கொள்வோம்.

பத்ரி 313ல் உள்ள தாலிபன்கள், மேற்கத்திய நாடுகளின் உள்ள கமாண்டோ படைப்பிரிவினைப் போலவே நவீன ராணுவ பாதுகாப்பு உடைகள், கை, கால் பாதுகாப்பு பேடுகள், டாக்டிகல் ரேடியோ, அதி நவீன துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள், தலைக்கவசங்கள் தரித்து நவீன ராணுவ வாகனங்களில் காபூலை சுற்றி வருகின்றனர். இரவு நேரப் பார்க்கும் கருவிகளும் வைத்திருப்பதால் இரவில் சண்டையிடும் திறனையும் இவர்கள் பெற்றிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவர்களுக்கு எங்கிருந்து இவை அனைத்தும் கிடைத்தன என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அமெரிக்கா, ஆப்கன் படைகளுக்கு வழங்கிய அனைத்து நவீன ஆயுதங்களும் தற்போது இவர்கள் கையில்தானே உள்ளது. ஏற்கனவே, 28 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கா ஆப்கன் படைகளுக்கு வழங்கியிருக்கிறது. அது அனைத்தும் இப்போது இவர்கள் கையில். போதாத

குறைக்கு 80 பில்லியன் ராணுவத் தளவாடங்களை ஆப்கனிலேயே விட்டுவிட்டு அவசர அவசரமாக ஓட்டம் பிடித்து வருகிறது அமெரிக்கா.

மற்ற தாலிபன் பயங்கரவாதிகளை விட இவர்கள் அதிக சண்டையிடும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். ஹக்கானி பயங்கரவாத இயக்கத்திடம் இவர்கள் பயற்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இரு இயக்கத்திற்குமான உறவு சமீபகாலத்தில் அதிகரித்துள்ளதாகவும் தலிபன்கள் கட்டமைக்க உள்ள அரசாங்கத்தில் ஹக்கானி இயக்கத்தினரும் பங்கெடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பத்ரி 313 படையால் மற்ற நாட்டு கமாண்டோ பிரிவினை எதிர்த்து சரிசமமாக சண்டையிட முடியுமா என்பது சந்தேகமே என்றாலும் தாலிபன்கள் ஒரு நவீன இராணுவத்தை கட்டமைத்து அதன் திறனை அதிகரிக்க உள்ளனர் என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம்.