வி.வி.கிரி

பாரதத்தின் நான்காவது குடியரசுத் தலைவர், ஆளுநர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் வி.வி.கிரி என்று அழைக்கப்படும் வரககிரி வேங்கட கிரி. பாரதத்தின் முதல் மக்களவைத் தேர்தலில் அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த இன்றைய ஆந்திரத்தின் பாதபட்டினம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.

நேருவின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறைக்குப் பொறுப்பு வகித்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக ராஜாஜி, டி.பிரகாசம் ஆகியோரின் அமைச்சரவையில் பதவி வகித்தவர் வி.வி.கிரி. 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை காந்தி தொடங்கியபோது, அமைச்சர் பதவியை உதறிவிட்டு, போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். 1957ல் இருந்து 1967வரை, உத்தரப் பிரதேசம், கேரளா, மைசூரு மாநிலங்களின் ஆளுநராகவும் பொறுப்பு வகித்தார்.

1967-ல் குடியரசுத் துணைத் தலைவரானார். 1969-ல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வி.வி. கிரியின் தந்தை ஜோகையா பண்டுலு சென்னை மாகாண சட்டக் கவுன்சில் உறுப்பினராக பதவி வகித்தார். வங்கத்தில் ‘வட இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சங்கம்’ அமைக்கப்பட்டத்தில் வி.வி. கிரியின் தந்தை ஜோகையாவுக்கு முக்கியப் பங்குண்டு.

தன் தந்தையின் வழியிலேயே அரசியலிலும் தொழிலாளர் சங்க நடவடிக்கையிலும் அடியெடுத்துவைத்தவர் வி.வி.கிரி. லண்டனுக்குச் சட்டம் படிக்கச் சென்ற கிரி, அப்போது தீவிரமடைந்திருந்த அயர்லாந்து தொழிலாளர்களின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். அதே காலக்கட்டத்தில்தான் காந்தியை அவர் லண்டனில் சந்தித்தார். 1921-ல் காந்தியின் அழைப்பை ஏற்று, வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட்டார்.

1926, 1942 ஆண்டுகளில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் தலைவராக பதவி வகித்தார். பாரத சுதந்திரத்துக்கு பின்னர், அவர் இலங்கைக்கு உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார். குடியரசுத் தலைவரான பிறகும்கூட, சிறப்பு அழைப்பின் பேரில் ஜெனீவாவில் நடந்த சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

ஏறக்குறைய 40 ஆண்டு காலம் சர்வதேசத் தொழிலாளர் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் வி.வி.கிரி. கிரி ஒரு சிறந்த எழுத்தாளராகவும் சிறந்த பேச்சாளராகவும் இருந்தார். இவர் ‘தொழில் நிறுவனங்களின் உறவுகள்’ மற்றும் ‘இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர் பிரச்சனைகள்’ போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார்.