ஏமன் போரில் குழந்தைகள்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆதரவாக சௌதி அரேபியாவும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவு அளிக்கிறது. இந்த போரால் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் பஞ்சத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், ‘ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் போரில் குழந்தைகளை பயன்படுத்துகின்றனர். ஈரானின் லட்சியங்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் போர்களுக்கு குழந்தைகளின் கல்வி, விளையாட்டு மற்றும் அவர்களின் உரிமைகளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பலி கொடுக்கின்றனர்’ என, ஏமன் நாட்டின் தகவல்துறை அமைச்சர் அல் இர்யானி குற்றம் சாட்டியுள்ளார். அங்கு போர் தொடங்கியது முதல் சுமார் 18 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளை கிளர்ச்சியாளர்கள் வலுகட்டாயமாக போரில் ஈடுபடுத்தி இருப்பதாக மனித உரிமை அமைப்புகளும் தெரிவித்துள்ளன.