அண்ணாமலை கண்டனம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மதுரை வருகைக்காக, பராமரிப்புப் பணிகள் குறித்துக் கடிதம் அனுப்பிய மதுரை துணை ஆணையர் சண்முகம் விடுவிக்கப்பட்டதற்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் மோகன் பாகவத், தேசம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமைப்பின் நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்திப்பது வழக்கமான ஒன்று. அவருக்கு உயர்மட்ட பாதுகாப்பான ‘இசட் பிரிவு’ பாதுகாப்பு வழங்கப்படுகிறது. உலகின் பெரிய சேவை அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் முதன்மையானது. அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் உயர்வுக்கும் சேவை ஆற்றுகிற அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.

மோகன் பாகவத், மதுரை, கன்னியாகுமரி பகுதிகளில் 22 முதல் 26 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாட்டின் ‘அதி உயர் பாதுகாப்பு’ கொண்ட தலைவர் வருகையின்போது வழக்கமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதைப் பின்பற்றியே மதுரை மாநகராட்சி நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர். இதற்காக, தமிழக அரசு மதுரை துணை ஆணையர் சண்முகத்தை பணி விடுவிப்பு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. யார் யார் வந்தால் என்னென்ன பராமரிப்பு, பாதுகாப்பு என்பதற்குத் தமிழக அரசு தனியாகப் பட்டியல் வைத்திருக்கிறதா? பாதுகாப்புப் பட்டியலில் இருக்கும் தலைவர்கள் வரும்போது அவர்களுக்கு உரிய வசதி செய்து கொடுப்பது சட்ட விரோதமா? தி.மு.கவின் சாமானியத் தலைவர்கள் சென்றால்கூட, மாநகராட்சி அதிகாரிகளே நேரில் சென்று சாலை சீரமைப்பு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்கின்றனர்.

ஆனால், அரசு தாங்கள் விரும்பாத அமைப்பின் மிக முக்கியமான தலைவர் வருகைக்கான ஏற்பாடுகளை வழக்கம்போல் செய்த அதிகாரிக்கு தண்டனை கொடுப்பது நியாயமா? இத்தகைய நடவடிக்கை தவறான முன்னுதாராணம் ஆகிவிடும். தமிழக அரசு நேர்மையாகப் பாரபட்சமின்றி நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றால், துணை ஆணையர் சண்முகம் பணி விடுவிப்பு ரத்து செய்யப்பட வேண்டும். இல்லையென்றால், திமுக ஆட்சியின் ஒருதலைப்பட்சமான செயலையும், அதிகாரிகளைப் பழிவாங்குகிற செயலையும் மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படும்” என தெரிவித்துள்ளார்.