பூட்டானில் பீம்

Bharat Interface for Money (பீம்), என்பது பாரதத்தின் டிஜிட்டல் பேமெண்ட் செயலி. இது கியூ-ஆர் கோட் (QR Code) ஸ்கேனிங்குகளுக்கான யு.பி.ஐ (Unified Payment Interface) வழியாக இயங்குகிறது. இதன் மூலம் பல்வேறு வங்கி கணக்குகள் ஒற்றை மொபைல் செயலியில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது பயனர்களுக்கும், சில்லறை வர்த்தகர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒன்றாக மாறியுள்ளது. பாரதத்தில் கொரோனா பொதுமுடக்கத்தின்போது,​​ பணம் செலுத்துவதற்கான எளிய, நம்பகமான வழிமுறையாக பீம் – யு.பி.ஐ மாறியது. 2020 – 21 நிதியாண்டில், 41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 22 பில்லியன் பணப் பறிமாற்றங்கள் இதன் வழியாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில், பீம் – யு.பி.ஐ பணப்பறிமாற்றத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பூடான் மாறியிருக்கிறது. அதே போல சிங்கப்பூரை தொடர்ந்ந்து பீம் – யு.பி.ஐயினை வணிக இடங்களில் ஏற்றுக்கொள்ளும் இரண்டாவது நாடாக பூடான் மாறியிருப்பதாக NPCI சர்வதேச பேமெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. NPCI என்பது இந்தியாவில் சில்லறை பேமெண்ட்கள் மற்றும் தீர்வு முறைகளை இயக்குவதற்கான ஒரு குடை அமைப்பு. காணொளி காட்சி மூலம் பூடானில் பீம் – யு.பி.ஐயினை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மகிழ்ச்சியின் நிலத்தை” காணச்செல்லும் பாரத சுற்றுலா பயணிகளுக்கு இது உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தார்.