கோயிலில் குளம் ஆக்கிரமிப்பு

சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘உலகப் புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலைச் சுற்றி, நீரை சேகரிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் ஏராளமான குளங்கள் வெட்டப்பட்டுள்ளது. கோயில் யானைகளை குளிப்பாட்ட, 4 ஏக்கர் பரப்பில் வெட்டப்பட்ட யானை குளத்தில், தற்போது 3 ஏக்கர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்றக் கோரி பலமுறை அதிகாரிகளுக்கும், முதல்வரின் தனிப் பிரிவுக்கும் புகார் மனுக்கள் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ‘மனுதாரரின் கோரிக்கை மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். ஆக்கிரமிப்புக்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி அவற்றை அகற்ற வேண்டும் ‘என, தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டது.