தடுப்பூசி 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு

சமீபத்தில் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் அரசுடன் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. கொரோனா காலத்தில், அதிக ஆபத்தான சூழலில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களான காவல்துறையினரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 4,868 போலீசாரில் 15 பேர் கொரோனா தொற்றில் இறந்துள்ளனர். தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 35 ஆயிரத்து 856 பேரில் 9 பேர் இறந்துள்ளனர். ஆனால், தடுப்பூசி 2 டோஸ்களும் போட்டுக்கொண்ட 42 ஆயிரத்து 720 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 2 பேர் மட்டுமே பலியானது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டி, தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு என்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் தெரிவித்துள்ளார்.