இதயம் அறக்கட்டளைக்கு சீல்

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வந்த இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் இருந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணின், 1 வயது ஆண் குழந்தை ஜூன் 28ம் தேதி கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், போலியான ஆவணங்களை பயன்படுத்தி நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், காப்பகத்தில் இருந்த அனைவரையும் வேறு காப்பகங்களுக்கு மாற்றும்போது, கர்நாடக மாநிலத்தை சேர்த்த பெண்ணின் 2 வயது பெண் குழந்தையும் காணாமல் போனது தெரிய வந்தது. காப்பக பணியாளர்களிடம் தல்லாகுளம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மதுரை நகைக்கடை உரிமையாளர் கண்ணன் என்பவருக்கு ஜூன் 13ல் 1 வயது ஆண் குழந்தை விற்கப்பட்டதும், 2 வயது பெண் குழந்தை கடந்த 16ம் தேதி அன்று, கல்மேடு பகுதியை சேர்ந்த ரகுபர் சாதிக் என்பவருக்கு விற்கப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு, குழந்தைகளை விலைக்கு வாங்கிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துனர். பின், பெற்றோர்கள் முன்னிலையில் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர் குழந்தைகளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதயம் அறக்கட்டளைக்கு சீல் வைக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள அறக்கட்டளை நிர்வாகி சிவக்குமார் உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.