இடித்துத்தள்ளப்பட்ட கோயில்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, சேவூர் ஊராட்சி, கிளாகுளம் கிராமத்தில், பழமையான ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலின் மேற்கூரை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் இடிந்து விழுந்துவிட்டது. அதனால் அக்கோயிலில் இருந்த பழமையான ஆஞ்சநேயர் சிலை, கற்தூண்கள் கோயிலுக்கு வெளியே வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது இக்கோயில் முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. பழமையான கோயில் இடிக்கப்பட்டு உள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். பழமையான கோயில் என்பதால் புனரமைக்கும் பணிக்காக இக்கோயில் இடிக்கப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக இடிக்கப்பட்டதா என்று தாசில்தார் தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது. அதன் பின்னரே கோயில் இடிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.