கைதுக்கு கண்டனம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக தி.மு.கவின் ஐ.டி பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சமூக வலைத்தள பிரபலம் கிஷோர் கே. சுவாமியை காவல்துறையினர் கைது செய்தனர். மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் காவல்துறையினர், தாம்பரம் கிளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவரை வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, கிஷோர் கே சாமி சைதாபேட்டை சிறையில் அடைக்கப்பட்டார். கிஷோர் கே. சுவாமியின் கைது நடவடிக்கைக்கு பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். பா.ஜ.கவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “திமுக தலைவர்களை விமர்சித்ததற்காக கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன். ஜனநாயகம் எங்கே போனது? ஸ்டாலினும், உதயநிதியும் பிரதமர் குறித்து பொய் பேசியது, திருமாவளவன் ஹிந்து தர்மம், பிராமணர்கள் மற்றும் பிரதமர் குறித்து அவதூறாக பேசும் போதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஒட்டுமொத்த தி.மு.கவினருமே பிராமணர்கள் குறித்துத் தவறாக பேசிவருகிறார்கள். தற்போது அவர்கள் தேவேந்திர குல வேலாளர்கள் குறித்து அவதூறாக பேசுகின்றனர். மேலும், எதிர்கட்சித் தலைவர்களை நாய்கள், துர்நாற்றம் என அழைத்த போதும், பெண்களை அவமரியாதையாக பேசிய போதும் ஏன் தி.முக.வினர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை? உள்ளதை கூறியதற்காக ஒருவர் கைது செய்யப்படுவதுதான் ஜனநாயகமா?,” என கேட்டுள்ளார்.