நியூயார்க் டைம்சுக்கு மத்திய அரசு கண்டனம்

அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்சில், ‘பாரதத்தில் கொரோனாவுக்கு இதுவரை மூன்று லட்சம் பேர் பலியாகியுள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. ஆனால், உண்மையில், 42 லட்சம் பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கையை, மத்திய அரசு மூடி மறைக்கிறது’ என, செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், தவறான தகவல் வெளியிட்டதற்காக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கண்டனம் தெரிவித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்களின்படி, கொரோனாவால் இறந்தவர்களை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முறையாக பதிவு செய்து வருகின்றன. மாவட்ட வாரியாக பலி எண்ணிக்கை தினமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பாரதத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், இப்படி கற்பனையான அறிக்கையை நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு பாரத அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது’ என கூறியுள்ளார்.