கொரோனா பெயரில் கடவுள் அவமதிப்பு

ராமநாதபுரம் மாவட்ட காவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், கொரோனா விழிப்புணர்விற்காக, ‘கொரோனாவை விரட்ட குறி சொல்லும் நவீன கருப்பசாமி’ என்ற கலை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவல் ஆணையர் கார்த்திக், கூடுதல் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளிட்ட அதிகாரிகளும், பொதுமக்கள் 200க்கும் அதிகமானோரும் பங்கேற்றனர். இதில், கருப்பசாமி வேடமிட்டு சாமி ஆடியவர், மருத்துவர், காவல் அதிகாரிகள் போல வேடமிட்டவர்கள் கால்களில் விழுந்து வணங்கினார். அவர்களிடம், ‘கொரோனாவை விரட்ட என்னால் முடியாது. நீங்கள்தான் என்னைவிட பெரியவர்கள். வாழும் கடவுள்’ என்றார். மேலும், பொதுமக்களை பார்த்து, ‘கோயிலுக்கு போகும் முட்டாள்களே… கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணியுங்கள்,’ எனக் கூறி, முக கவசம் அணிந்தார். ஹிந்து கடவுளான கருப்பசாமி வேடமணிந்து சாமி ஆடியவரின் இந்த செயல், கடவுள்களை இழிவுபடுத்துவது போல் அமைந்தது. மேலும், கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் அங்கு மக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர்.

கொரோனா விழிப்புணர்வு என்ற பெயரில், ஹிந்துக்களின் கடவுள்களையும் ஹிந்துக்களையும் அவமதிக்கும் இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. இதனை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்த ஆட்சியர், காவல் அதிகாரிகள் மீதும் அதில் நடித்தவர், அவரை நடிக்க பின்புலமாக செயல்பட்டவர்கள் மீதும் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.