விரும்பி செய்தால் வெற்றி பெறலாம்

நாம் விரும்பிய தொழிலை அல்லது நாம் செய்யும் தொழிலை விருப்பத்தோடு செய்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.அதில், கர்நாடகாவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான கிஷோர் இந்துகாரியும் ஒருவர்.கரக்பூர் ஐ.ஐ.டியில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, தனது பி.ஹெச்.டி-ஐ அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தவர் கிஷோர்.அங்கேயே உலகின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான இண்டெல் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தோடு ஆறு ஆண்டுகள் வேலை பார்த்தார்.

2012ல் பாரதம் திரும்பிய அவர், இங்கேயே மனதுக்குப் பிடித்த ஒரு சொந்தத் தொழில் செய்ய முயற்சித்தார்.ஒருமுறை ஹைதராபாத் சென்றபோது அங்கு தரமான பால் கிடைப்பதில்லை என்பதை அறிந்துகொண்ட கிஷோர், அதையே தனது தொழிலாக்கிக்கொள்ள முடிவு செய்தார்.கோயம்புத்தூரில் இருந்து 20 மாடுகளை வாங்கி பால் கறந்து வீடுகளுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்தார்.அவரின் குடும்பத்தினரும் உதவி செய்தனர்.ஆரம்பத்தில் தொழிலில் நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டார்.

நாட்கள் செல்ல செல்ல பால் அதிகம் கிடைக்கத் தொடங்கியது, அதனை சேமித்து வைத்து விற்பனை செய்ய பிரீசர் உள்ளிட்ட பொருட்களில் தனது சேமிப்பான ஒரு கோடியை துணிந்து முதலீடு செய்தார். அவரது ஆர்வம், ஊக்கம், விடா முயற்சியால் தொழில் மெல்ல விரிவாயிற்று. இதனால், தனது ‘சித்து பார்ம்’ மூலமாக 2018ல் ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள 6 ஆயிரம் குடும்பங்களுக்கு நாள்தோறும் பால் விநியோகம் செய்யும் அளவுக்கு தனது பால் பண்ணை வளர்த்துள்ளார்.

பசு மாடு, எருமை மாடு பால் தனித்தனியாக விற்பனை செய்வது, விரும்பும் நபர்களுக்கு ஒரு மாட்டுப் பாலை தனியாக பராமரித்து விற்பது என சிந்தித்து செயல்படும் கிஷோரின்

சித்து பார்மில் தற்போது 120க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.10,000 வாடிக்கையாளர்களுடன் ஆண்டுக்கு 44 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் கிஷோர்.

உலகின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்கி வந்த கிஷோர் இந்துகாரி, தான் விரும்பிய தொழிலுக்காக அதனை உதறித்தள்ளி, அதில் சாதனை புரிந்துள்ளது மற்றவர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் செயல் என்றால் அது மிகை அல்ல.