பட்டியலினத்தவரை ஒதுக்கும் சர்ச்சுகள்

கிறிஸ்தவ மதத்தில் ஜாதிகள் இல்லை என்று கூறிக்கொண்டு அப்பாவி பட்டியலினத்தவர்களை மதம் மாற்றுபவர்கள் அவர்களை எண்ணிக்கைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கான உரிமைகளை மறுக்கும் கொடுமை கிறிஸ்தவ மதத்தில் பல காலங்களாக இருந்துவருகிறது. பட்டியலினத்தவர்களுக்கென குறிப்பிட்ட நாட்கள் மட்டும் அனுமதி, தனி இறுதி யாத்திரை வாகனம் என அனைத்திலும் அவர்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றனர்.தமிழகத்தில், கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் பட்டியலினத்தவர்களாக இருக்கும் சூழலில், ஒரே ஒரு பட்டியலின பிஷப் மட்டுமே உள்ளார்என்பது அதிர்ச்சித் தரும் உண்மை.இதற்காக போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், சேலத்தில் பட்டியலின கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு மறைமாவட்டத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டும் பட்டியலினத்தவர் அல்லாத அருள்செல்வம் ராயப்பன் என்பவரை வாட்டிகன் பிஷப்பாக நியமித்துள்ளது. இந்த நியமனத்திற்கு தலித் மற்றும் பின்தங்கிய வகுப்புகளின் இந்திய கத்தோலிக்க பிஷப் மாநாட்டில் முன்னாள் செயலாளர் தேவசகாயராஜ் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். பிஷப் நியமனத்தில் வாரிசு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுவதாக தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேத்யூ குற்றம் சாட்டியுள்ளார்.’கடந்த 30 வருடங்களாக ஒரு பட்டியலினத்தவரை கிறிஸ்தவ பிஷப் ஆக நியமிக்க கோரிக்கை வைத்தும் மீண்டும் பட்டியலினத்தவர் அல்லாதவரை பிஷப்பாக நியமித்துள்ளது தங்களுக்கு பெரும் பின்னடைவு.இது குறித்து பலமுறை வலியுறுத்தி தேர்வுக்குழு மற்றும் பிற ஆயர்களுக்கு கடிதங்கள் எழுதியதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதனை வாட்டிகன் பரிசீலனைகூட செய்யவில்லை’ என தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தின் தலைவர் மேரி ஜான் தெரிவித்துள்ளார்.