மருத்துவ சங்கத்துக்கு நீதிபதிகள் அறிவுரை

கடந்த மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ், ஆங்கில மருத்துவம் காரணமாக லட்சக்கணக்கான கொரோனா நோயாளிகள் உயிரிழக்கின்றனர், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்த விவகாரம் தொடர்பாக, டெல்லி மருத்துவ சங்கம் (டி.எம்.ஏ) சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது.நீதிமன்றத்தில், இந்த மனு குறித்த விசாரணையில், ‘ராம்தேவின் கருத்து எங்கள் சங்க உறுப்பினர்களை பாதிக்கிறது.மேற்கொண்டு கருத்துகளை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும்.தனது கருத்துக்காக மன்னிப்பு கோருமாறும் ரூ.1 அடையாள அபராதம் செலுத்துமாறும் அவருக்கு உத்தரவிட வேண்டும்.கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி ‘கரோனில்’ என்ற மருந்தை ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்கிறது.இந்த மருந்து குறித்து விளம்பரப்படுத்தக் கூடாது என அரசு கூறிய நிலையிலும், ரூ.250 கோடிக்கு இந்த மருந்தை விற்பனை செய்துள்ளது பதஞ்சலி.இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என வாதிடப்பட்டது.

இது குறித்து நீதிபதிகள் கூறும்போது, ‘நாளை, நானே ஹோமியோபதி மருத்துவம் போலியானது என கருதலாம்.அது ஒருவருடைய கருத்து.இதற்கு எதிராக எப்படி வழக்கு தொடுக்க முடியும்.ராம்தேவுக்கு அலோபதி மீது நம்பிக்கை இல்லை.யோகா மற்றும் ஆயுர்வேதத்தால் அனைத்தையும் குணப்படுத்த முடியும் என்று அவர் நம்புகிறார்.அவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு.அவரது கருத்து தவறு என கருதினாலும், அதை எதிர்த்து பொதுமக்கள் நலன் என்ற பெயரில் வழக்கு தொடுக்க முடியாது. அவரின் கொரோனில் மருந்து வாங்கிய 10 ஆயிரம் பேரில் 9,500 பேர் இறந்தார்கள் என்று நீங்கள் ஊடகங்களில்கூறுவீர்களேயானால் அதற்கெதிராக ராம்தேவ் உங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வாரா? அலோபதி சிலருக்கு வேலை செய்கிறது.சிலருக்கு வேலை செய்வதில்லை.பதஞ்சலி விதிகளை மீறினால், அதுகுறித்து அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீங்கள் ஏன் அதைப்பற்றி கவலைப்படுகிறீர்கள்.நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாக மருத்துவ சங்கம் கோவிட்டுக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும்.இந்த மனு மீது பதில் மனு தாக்கல் செய்ய ராம்தேவ் தரப்புக்கு உத்தரவிடப்படுகிறது’ என கூறி வழக்கின் மீதான அடுத்த விசாரணையை ஜூலை 13க்கு ஒத்திவைத்தது.