வீணடிக்கப்படும் தடுப்பூசிகள்

ராஜஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனா தடுப்பூசி மருந்துகள் குப்பைகளில் வீசப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.சுமார் 500க்கும் மேற்பட்ட குப்பிகளில் 2,500க்கும் அதிகமான டோஸ் மருந்துகள் அதில் இருந்தன.இதனை ராஜஸ்தானின் சுகாதார அமைச்சர் ரகு சர்மா மறுத்தார்.இந்நிலையில், இச்செய்தியை வெளியிட்ட டெய்லி டைனிக் பாஸ்கர் என்ற அந்த செய்தி நிறுவனம் இது குறித்து மேலும் தகவல் சேகரித்தது.அதில், மேற்கண்ட சம்பவம் மட்டுமல்லாமல், சில மருத்துவமனைகளில்,80 சதவீதம் மருந்து நிரப்பப்பட்ட குப்பிகளை குப்பையின் இடையே வைத்து அப்புறப்படுத்தியதைக் கண்டறிந்தது.சில இடங்களில் மருந்து குப்பிகள் எரிக்கப்பட்டுள்ளன.சில இடங்களில் தடுப்பூசிகளை 12 அடி ஆழகுழிகளில் புதைத்து வைக்கப்பட்டன.அதை குறித்து கேட்டபோது அவை காலாவதியான மருந்துகள் என கூறப்பட்டது.எனினும் மருத்துவ குப்பைகளை அகற்றவென்று பிரத்தியேக வழிமுறைகள் உள்ளன.அதனையும் அவர்கள் பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன்,  ‘டைனிக் பாஸ்கர்’ மற்றும் ‘ராஜஸ்தான் பத்ரிகா’ ஆகியவற்றில் வெளியிடப்பட்ட இந்த செய்திகளை மேற்கோள் காட்டி, அம்மாநில சுகாதார அமைச்சர் ரகு ஷர்மாவிடம் இது குறித்து உடனடியாக ஆராய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.