குஜராத்தில் கட்டாய மதமாற்றத் தடை சட்டம்

குஜராத் அரசு, ‘மதச் சுதந்திர மசோதா-2021’ தயார் செய்து கடந்த ஏப்ரல் மாதம் அம்மாநில பேரவையில் நிறைவேற்றியது. இந்த மசோதா, ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத்தின், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆளுனரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இது தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை குஜராத் மாநில பேரவை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா தெரிவித்துள்ளார். இம்மசோதாவின்படி, ஒருவரை கட்டாயமாக மதம் மாற்றினாலோ, கட்டாய மதம் மாற்றுவதற்கு துணை புரிந்தாலோ குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தாலோ, பட்டியலின அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலோ, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 4 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், ரூ. 3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். எதாவது ஒரு அமைப்பு இந்த குற்றத்தைப் புரிந்தால், அந்த அமைப்பின் பொறுப்பாளர்களுக்கு 3 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். முன்னதாக, திருமணம் செய்வதற்காக பெண்களை கட்டாயப்படுத்தி, ஏமாற்றி மதமாற்றம் செய்வதை தடுக்கும் வகையிலான ‘கட்டாய மதமாற்ற தடைச்சட்டம்’ உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மத்தியபிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது நினைவு கூரத்தக்கது.