டி.ஏ.பி உர மானியம் அதிகரிப்பு

உர விலைகள் குறித்த உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். அப்போது உர விலைகள் உயர்வு குறித்த விரிவான விளக்கம் அவருக்கு அளிக்கப்பட்டது. விவசாயிகள் நலனை கருத்தில் கொண்ட பிரதமர் மோடி, விவசாயிகள் எக்காரணத்தைக் கொண்டும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, சர்வதேச விலையேற்றத்திற்கு இடையிலும் பழைய விலைகளுக்கே உரங்களை விவசாயிகள் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு மூட்டை டி.ஏ.பி உரத்திற்கான மானியத்தை ரூ 500ல் இருந்து ரூ 1,200 ஆக உயர்த்துவது தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இது 140 சதவீதம் கூடுதல் மானியம். இதன் மூலம், சர்வதேச சந்தைகளில் விலையேற்றத்திற்கு இடையிலும், டி.ஏ.பி ரூ 1200-க்கே விற்கப்படும். ஒரு மூட்டைக்கான மானியம் இந்தளவுக்கு இதுவரை உயர்த்தப்பட்டதில்லை. இந்த மானியத்திற்காக கூடுதலாக ரூ 14,775 கோடியை மத்திய அரசு செலவிடவுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி விலையேற்றத்தின் அனைத்து சுமையையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலத்தில், சர்வதேச அளவில் டிஏபியில் பயன்படுத்தப்படும் பாஸ்பொரிக் அமிலம் மற்றும் அம்மோனியா உள்ளிட்டவற்றின் விலை 60 முதல் 70 சதவீதம் வரை உயர்ந்தது. இதன் காரணமாக ஒரு மூட்டை டிஏபியின் விலை ரூ 2,400 ஆக இருக்கும். மத்திய அரசின் வழக்கமான மானியம் ரூ 500 போக ரூ 1,900க்கு உர நிறுவனங்கள் விற்க முடிவு செய்திருந்தன. ஆனால், மத்திய அரசின் மானிய உயர்வு காரணமாக ஒரு மூட்டை உரம் ரூ 1,200-க்கு விவியசாயிகளுக்கு கிடைக்கும்.