கடற்படையில் சேர 9.5 லட்சம் பேர் விண்ணப்பம்

இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதை ஊக்குவிக்க, ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது.  முதல்கட்டமாக, இத்திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 46 ஆயிரம் வீரர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 4 ஆண்டு காலம் ஒப்பந்த முறையில் ராணுவத்தின் முப்படைகளிலும் பணியாற்றும் இந்த அறிவிப்புக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இத்திட்டத்தில் விமானப்படையில் இணைவதற்கு 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இந்திய கடற்படையில் 2 பிரிவுகளுக்கான விண்ணப்பப் பதிவு நடந்து முடிவடைந்துள்ளது. இதில், 82 ஆயிரம் பெண்கள் உட்பட 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.