79வது கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ்

சர்வதேச மாஸ்டர் என்ற அந்தஸ்திலிருந்து பாரதத்தின் கிராண்ட் மாஸ்டராக 15 வயதான தமிழகத்தைச் சேர்ந்த பிரனேஷ் என்பவர் உயர்ந்துள்ளார். தமிழகத்தில் காரைக்குடியைச் சேர்ந்தவர் 15 வயதான செஸ் மாஸ்டர் பிரனேஷ். தனது 5 வயது முதல் செஸ் விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் காட்டி விளையாடி வருகிறார். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பட்டங்களையும் குவித்துள்ளார். காமன்வெல்த் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பிரனேஷ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் ரில்டன் கோப்பை சர்வதேச செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில், 9 போட்டிகளில் 8 புள்ளிகளை பெற்றுள்ளார். இதன் மூலமாக சர்வதேச மாஸ்டர் என்ற அந்தஸ்திலிருந்து கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்திற்கு அவர் உயர்வு பெற்றுள்ளார். பாரதத்தின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்துள்ளார். மேலும், தமிழகத்திலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் 28வது செஸ் வீரர் என்ற பெருமையை பிரனேஷ் பெற்றுள்ளார். இவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தை சேர்ந்த, 16 வயதே ஆன இந்திய செஸ் வீரர் பிரனேஷ், 79வது செஸ் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்துள்ளார். 5 வயதில் இருந்து ஆரம்பித்த அவரது விளையாட்டுப் பயணம், 13 வயதில், சர்வதேச செஸ் மாஸ்டர் என்ற உச்சத்தைத் தொட்டு, தற்போது கிராண்ட் மாஸ்டர் எனும் மைல் கல்லை எட்டியிருக்கிறது. தேசிய, சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றிருக்கும் அவர், மென்மேலும் பல சாதனைகள் படைத்து, தேசத்திற்கு மேலும் பெருமை சேர்க்க, தமிழக பா.ஜ.க சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என வாழ்த்தியுள்ளார்.