27 நாடுகளுக்கு 7 தூதுக்குழுக்கள் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?

பாரதம் 7 தூது குழுக்களை 27 நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.  சர்வதேச அளவில் பாரதத்ததின்  நிலைப்பாட்டையும், கொள்கைகளையும் விளக்குவதற்கும், குறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைப்பதற்கும்  இந்த பயணம் முக்கியமானதாகும். சமீபத்தில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப்

பயணிகளை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது பாரதம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிரான  நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. இந்த 7 குழுக்களில் 51 பேர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், வெளியுறவுத் துறையில் பராதம் பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. ஐ.நா சபை, அணிசேரா இயக்கம், சார்க், ஜி-20, காமன்வெல்த், பிரிக்ஸ் (BRICS) போன்ற அமைப்புகளில் பாரதம் முக்கிய உறுப்பினராக உள்ளது. இந்தக் குழுக்களை அனுப்புவதன் மூலம் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதோடு, பாரதத்தின்  முக்கியத்துவம் மற்றும் செல்வாக்கையும் நிலைநாட்ட முடியும்.  பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கவும், இந்த குழுவின் மூலம் உலக நாடுகளுக்கு உண்மையை புரிய வைக்க முடியும் என்ற நோக்கத்தோடு இந்த குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் ரஷ்யா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து, பிராந்திய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த பாரதத்தின்  நிலைப்பாட்டையும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நோக்கங்களையும், அதற்கான நியாயமான காரணங்களையும் விளக்குகின்றன. இது பாகிஸ்தானுக்கு எதிராக  பாரத்ததின் முக்கியமான ராஜீய ரீதியிலான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-−காஷ்மீரில் இருந்த ஒன்பது முக்கியமான பயங்கரவாத முகாம்களை பாரதம் வெற்றிகரமாக அழித்தது.  ஐ.நா. சபையில் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட லஷ்கர்-−இ−-தொய்பா, ஜெய்ஷ்−இ−-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளங்களை குறிவைத்து அழித்ததும், இதனால் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதை தெளிவுபடுத்த இந்த குழுவின் மூலம் விளக்கப்பட்டது. அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல்களை நடத்தியது என்ற பாகிஸ்தானின் பொய் பிரச்சாரம்  இதன் மூலம் முறியடிக்கப்பட்டது.

பாரத அரசு பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்த  முனைந்தது,  ஐரோப்பிய ஒன்றியம் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 22 அன்று ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலையும், அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) அதன் 27 உறுப்பு நாடுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கின்றன.

பாகிஸ்தானின் மையப்பகுதியான பஞ்சாப் மாகாணம் மற்றும் பஹாவல்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்குள் ஆழமாகத் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை கூண்டோடு அழித்தது பாரதம். தனது மக்களைப் பாதுகாக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என்பதை பாரதம் உலகிற்குக் காட்டியது.                                            