மீட்கப்பட்ட 10 மீனவர்கள்

மாலத்தீவு கடல் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 10 பாரத மீனவர்கள், மே 6, 2023 அன்று இந்திய கடலோரக் காவல் படையினரால் விசாகப்பட்டினத்திற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இவர்கள், கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி கன்னியாகுமரி அருகே உள்ள தேங்காய்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அவர்கள் பயணம் செய்த படகு இயந்திரக் கோளாறால் மாலத்தீவிற்குச் சென்றதை அடுத்து உதவி ஏதும் இல்லாமல் மீனவர்கள் ஐந்து நாட்கள் திண்டாடினார்கள். ஏப்ரல் 26ம் தேதி, இந்தியக் கடலோர காவல் படையுடன் இணைந்து மாலத்தீவு தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டனர். பத்து மீனவர்களுள், எட்டு பேர் கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர்கள், இருவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள். மீட்கப்பட்ட மீனவர்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்துள்ளது.