‘ஹெல்த் இன்சூரன்ஸில்’ கால் பதிக்கும் எல்.ஐ.சி.,

பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி., உடல்நலக் காப்பீடு பிரிவில் கால் பதிக்க உள்ளதாக, அதன் தலைவர் சித்தார்த்த மொஹந்தி தெரிவித்துள்ளார்.

சந்தர்ப்பம் அமைந்தால், அதற்கான கையகப்படுத்தும் வாய்ப்புகள் குறித்தும் பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார். நம் நாட்டின் காப்பீடு சட்ட நடைமுறையின் படி, ஒரு நிறுவனத்துக்கு ஆயுள், பொது மற்றும் உடல்நலக் காப்பீடுக்கான கூட்டு உரிமங்கள் வழங்கப்படாது. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகத்தான் உரிமம் பெற வேண்டும்.

இந்நிலையில், காப்பீடு துறை தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த பார்லிமென்ட் குழு, நடப்பாண்டு பிப்ரவரியில், கூட்டு உரிமம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தவும், அது தொடர்பான சட்டத் திருத்தத்தை விரைவில் மேற்கொள்ளவும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

இவ்வாறு கூட்டு உரிமங்கள் வழங்குவது மக்களிடையே காப்பீடு பயன்பாட்டை அதிகரிக்கவும், ஒரே குடையின் கீழ் அனைத்து விதமான காப்பீடுகளை பெறவும் வழிவகுக்கும் என தெரிவித்திருந்தது. மேலும், காப்பீடு நிறுவனங்களின் செலவை குறைத்து, இணக்கத்தை கடைப்பிடிப்பதை எளிதாக்கும் என்றும் தெரிவித்தது. இதையடுத்து, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்துடன் ஆலோசித்த பிறகு மத்திய அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.