வேற்று மதத்தவர் விரும்பினால் இந்து மதத்தை தழுவ ஏற்பாடு: திருமலையில் நிறைவுபெற்ற சனாதன தார்மீக கருத்தரங்கில் தீர்மானம்

திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கிய சனாதன தார்மீக கருத்தரங்கு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் சுமார் 60 பீடாதிபதிகள், மடாதிபதிகள் மற்றும் ஜீயர்கள் கலந்து கொண்டனர். கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து நிறைவு நாளானநேற்று, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி கூறியதாவது: சனாதன இந்து தர்ம பாதுகாப்புக்காவே திருமலையில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் 19 தீர்மானங்கள் ஒருமன தாக நிறைவேற்றப்பட்டன. கடந்த 2007, 2008-ம் ஆண்டு இதேபோல் சனாதன தார்மீக கருத்தரங்கு நடத்தப்பட்டது. தற்போது 3-வது முறையாக மீண்டும் 16 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதில் முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதன்படி, வேற்று மதத்தவர்கள் கூட, அவர்களின் விருப்பப்படி இந்து மதத்தை தழுவலாம். அவர்களுக்கு திருமலையில் புனித நீர் தெளித்து இந்து மதத்திற்கு வரவேற்கலாம் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக திருமலையில் ஒரு இடம் ஒதுக்கப்படும். அப்படி இந்து மதத்தை தழுவியவர்களுக்கு ஏழுமலையானின் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து பிரிவினருக்கும் புரியும் வகையில், நமது இந்து இதிகாசங்கள், புராணங்கள் குறித்து ஆன்மிக வல்லுநர்களால் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். திருமலை போல் திருப்பதி நகரையும் ஆன்மிக நகரமாக வைத்துக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஏழை இந்துக்களை வேற்று மதத்துக்கு மாற்றும் சூழ்ச்சி நடந்து வருகிறது. அதனை தடுக்கவும் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள், எஸ்டி, எஸ்சிபிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்து கோயில்களை கட்டி 3 வேளையும் தீப, தூப, நைவேத்தியங்கள் நடைபெறும்படி நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. இந்து மதத்திற்கு ஆணி வேரான வேதங்கள், மற்றும் நமது சாஸ்திரங்களை பாதுகாக்கவும் இந்த கருத்தரங்கில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்து மதத்தில் இருந்து விலகிச் சென்ற மற்றும் செல்லும் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து இந்துமதத்தினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி தெரிவித்தார்.