வருவோர், போவோர் எல்லாம் பிரதமராக முடியாது: அண்ணாமலை ஆவேசம்

”இந்திய பிரதமராக வர வேண்டும் எனில் சில அடிப்படை தகுதிகள் தேவை. வருவோர், போவோர் எல்லாம் பிரதமராக முடியாது,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரைக்கு, சேலம் மாவட்டம், ஓமலுாருக்கு நேற்று வந்த அவர் பேசியதாவது:

போலி வாக்குறுதி அளித்து அரசியல் செய்யும் தி.மு.க.,வை, வேரோடு அகற்ற, ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை துவங்கப்பட்டுள்ளது.

பத்தாம் ஆண்டில், பா.ஜ., ஆட்சி அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த, 2014ல், இந்தியா என்று சொன்னால் ஊழல் என்று சொல்வர். காங்., ஆட்சி காலத்தில், 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. கடந்த, ஒன்பது ஆண்டு, பா.ஜ., ஆட்சியில் பிரதமர் மோடி ஒரு குண்டூசியை கூட திருடவில்லை.

தி.மு.க., ஆட்சியில், 35 அமைச்சர்கள் ஆட்சி செய்யக்கூடிய நிலையில், 11 பேர் மீது ஊழல் வழக்கு உள்ளது. அமைச்சர்கள் வரிசையாக சிறைக்குச் செல்வர்.

தமிழகத்தில் முன்னாள், இன்னாள், எம்.எல்.ஏ., அமைச்சர்கள், எம்.பி.,க்கள் என, 120 பேர் மீது ஊழல் வழக்கு உள்ளது. அவர்களை வீட்டுக்கு அனுப்பினால் போதும். தமிழகத்தில் ஏழை என்ற பேச்சுக்கு வாய்ப்பில்லை.

இந்திய பிரதமராக வர வேண்டும் எனில், சில அடிப்படை தகுதிகள் தேவை. வருவோர், போவோர் எல்லாம் பிரதமராக முடியாது.

எங்கள் தலைவருக்கு ஓட்டுப்போட்டால் துணை பிரதமராகி விடுவார் என, தெரிவிப்பர். முதல்வராக இருக்கும் போதே சந்தி சிரிக்குது. தமிழகத்தில் பிறந்த அரசியல்வாதிகளை விட, நம் பிரதமர் தமிழக கலாசாரம், தமிழை நேசிக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, தமிழக கடன் அதிகரித்துவிட்டது என்றார் ஸ்டாலின்.

தமிழகத்தில் கடந்த, 75 ஆண்டுகளில் கடன், 6 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த, 31 மாத, தி.மு.க., ஆட்சியில், 2 லட்சத்து, 61 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த கடனை நாம் கட்ட, 87 ஆண்டுகளாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.