சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியரின் மதுரையில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் பற்றிய குறிப்புகள், மிகப் பழைமையான சங்க நூல்களில் விரவிக் கிடக்கின்றன. பரிபாடல், திருமுருகாற்றுப்படை, அகநானுறு, கலித்தொகை, மதுரைக் காஞ்சி ஆகிய பழமையான இலக்கியங்களில் திருப்பரங்குன்றம் சிறப்பிடம் பெற்றது.
குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம், தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என்று பல பெயர்களில் போற்றப்படுகிறது.
இப்பொழுது முருகப்பிரானுடைய பெருங்கோயிலாக வழிபாட்டில் திகழ்வது பொ.ஆ. 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கப் பெற்றது.
சங்க காலத்தில் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலக் கடவுளாக, செந்நிற மேனியனாக, சேவற்கொடியோனாக, கொற்றவை மைந்தனாக, சூரியனுக்கு ஒப்பானவனாக வழிபடப் பெற்றவன் முருகன். முருகப் பெருமானுக்கு திருக்கோயில்கள் பல இருப்பினும் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய்(திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோராடல்(திருத்தணி), பழமுதிர் சோலை ஆகிய அறுபடை வீடுகள் சிறப்பு வாய்ந்தவை. ஆற்றுப்படை வீடுகள் என்பதுவே பின்னாளில் ஆறுபடை வீடுகள் என்றாகி அறுபடை வீடுகள் ஆயின.
ஆற்றுப் படுத்துதல் எனும் இலக்கிய வகையில் அமைந்த ஆற்றுப்படை நூலில் சிறப்பு வாய்ந்தது திருமுருகாற்றுப்படை. முருகப் பெருமான் மீது ஆற்றுப்படுத்தும் அந்நூலில் சிறப்பாகக் குறிப்பிடப்படுவது திருப்பரங்குன்றம். இதுவே இந்த அறுபடை வீடுகளுள் முதற்படை வீடாக விளங்குவது.
திருமுருகாற்றுப்படையில் ‘மாடமலிமறுகில் கூடற்குடவாயன்’ என்றும் கந்த புராணத்தில் ‘கூடலின் குட திசை அமர பரங்குன்று’ என்றும் திருப்பரங்குன்றம் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இத்தலத்து முருகப் பெருமானிடத்து அடியார்களை ஆற்றுப்படுத்தி நக்கீரர் அருளிச் செய்த திருமுருகாற்றுப்படை சங்க காலம் தொட்டே இக்குன்றத்தில் முருக வழிபாடு சிறப்புற்று விளங்கியதை உணர்த்துகின்றது. குன்றத்தின் இயற்கை எழில் நக்கீரரால் அழகாக சித்திரிக்கப்பட்டுள்ளது.
அகநானூறு திருப்பரங்குன்றத்தை முருகன் குன்றம்(59) என்றும் ‘ஒடியா விழவின் நெடியோன் குன்றம்’ (149) என்றும், மதுரைக் காஞ்சி ‘ தனிமழை பொழியும் தண் பரங்குன்றம்’ (264) என்றும் கூறுகிறது. பரிபாடல் பரங்குன்றின் முருகனைப் பற்றிக் கூறுகையில், குன்றத்தில் எழுத்து நிலை மண்டபம் ஒன்று இருந்ததாகவும், அங்குப் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறது. இந்த சங்கப் பாடல்கள் அனைத்தும் திருப்பரங்குன்றம் முருகனுக்குரியவை.
முருகனின் கோயில் உள்ள குன்று சிவலிங்க வடிவில் அமைந்துள்ளதால் பரங்குன்று என்றும், சிவன் “பரங்குன்றநாதர்’ என்றும் பெயர் பெற்றாராம். பரன் என்பது சிவனைக் குறிக்கும். சிறப்பை உணர்த்தும் விதமாக ‘திரு’ அடைமொழியுடன் திருப்பரங்குன்றம் என வழங்கப் பெறுவதாயிற்று. குன்றையே சிவலிங்கமாகப் பாவித்து வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது.
தொடக்க காலத்தில், திருப்பரங்குன்றம் கோயிலுக்குப் பின்புறத்தில் தென்பரங்குன்றம் குடைவரைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. அருணகிரிநாதர் தாம் எழுதிய திருப்புகழில், “தேவர் பணிந்தெழு தென்பரங்குன்றுறை பெருமாளே” என்று பாடினார். பரங்கிரி, சுமந்த வனம், பராசல தலம், குமாரபுரி விட்டணு துருவம், கந்தமாதனம், கந்தமலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம், முதல்
படை வீடு எனப் பல பெயர்களில் பல்வேறு காலங்களில் அழைக்கப்பட்டுள்ளது. இம்மலையை வடதிசையிலிருந்து பார்க்கும் பொழுது கைலாய மலை போன்றும், கிழக்கிலிருந்து பார்க்கும்பொழுது பெரும்
பாறையாகவும், தெற்கிலிருந்து பார்க்கும்போது பெரிய யானை படுத்திருப்பது போன்றும், மேற்கிலிருந்து பார்க்கும்போது பெரிய சிவலிங்க வடிவமாகவும் காட்சியளிக்கும்.
தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி ஆகிய பராசர முனிவரின் புதல்வர்கள் அறுவர் தங்கள் தந்தையின் சொல் கேளாமல் முறை தவறினர். எனவே, அவர்களை மீனாக மாற பராசரர் சாபமிட்டார். ஒரு நாள் முருகப் பெருமான் சரவணத்தில் தனது அன்னை உமையம்மையிடம் பால் அருந்துகையில், பால் துளிகள் அந்த மீன்கள் மீது விழவே சாபம் நீங்கியது. அறுவரும் பரங்குன்றம் முருகனைத் தியானித்து தவம் இயற்றி ஞான யோகம் அடைந்தனர். எனவே இப்பெயர் பெற்றதாக தல புராணம் கூறுகிறது. பிற்காலத்தில் முருகன் பெயராலேயே இக்கோயில் பெயர் பெற்றுள்ளது. விழாக் காலங்களில் சிவனுக்குக் கொடியேற்றப் பட்டாலும் இங்கு முருகனே வீதி உலா வருகிறார். முருகன் சிவனது அம்சமானவர் என்பதால் இவ்வாறு செல்வதாகக் கூறப்படுகிறது. ஆகவே, இங்கே முருகன் “சோம சுப்பிரமணியர்’ என்ற பெயரும் பெற்றுள்ளார். சோமன் என்பது சிவனைக் குறிக்கும். குடைவரைக்கோயிலான இக்கோயில் சிவபெருமானுக்காகவே தோற்றுவிக்கப்பட்ட போதிலும் பிற்காலத்தில் இது முருகப் பெருமானின் சிறப்புத்தலமானது.
சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக சிவபெருமான் அருள் பாலிக்கிறார். குன்றத்திற்குச் செல்பவர்கள் முதலில் சிவனை வணங்கிவிட்டே முருகனை வழிபட வேண்டும் என்பது மரபு. இத்தலத்தில்தான் இந்திரனின் விருப்பத்திற்கு இணங்க முருகப் பெருமான் தெய்வானையைப் பங்குனி உத்திர நன்னாளில் திருமணம் செய்ததாக தல புராணம் கூறுகிறது.
தமிழ் கடைச் சங்கத்தின் தலைவர் நக்கீரன் சிவனாருடன் வாதம் புரிந்தமையால் சாபம் பெற்று நோய்வாய்பட்டார். நோய் தீர, தீர்த்த யாத்திரை மேற்கொண்டு குன்றத்தில் தங்கினார். சரவணப் பொய்கைக்கரையில் ஆலமரத்து அடியில் பஞ்சாட்சரப் பாறையில் அமர்ந்து சிவனைத் தியானித்து வழிபட்டார். அப்போது மரத்தில் இருந்து உதிர்ந்த ஓர் இலையின் ஒரு பாதி நீரிலும் மறு பாதி நிலத்திலும் விழுந்தது. நீரில் விழுந்த இலையின் பாகம் மீனாகவும் நிலத்தில் விழுந்த பாகம் பறவையாகவும் மாறியது. இந்த அரியக் காட்சியைக் கண்டு கீரனின் தியானம் கலைந்தது. அக்காட்சியில் அவர் மனம் லயித்தபோது கற்முகி என்ற பூதம் அவரைத் தூக்கிச் சென்று குகையில் வைத்தது. அங்கிருந்து தப்பிக்க அவர் திருமுருகாற்றுப்படை பாடினார்.
பாடப் பாட முருகனின் கைவேல் குகையைப் பிளந்து பூதத்தைக் கொன்று நக்கீரரைக் காப்பாற்றியது. வேல் பாறையைப் பிளந்த அடையாளத்தை தென்பரங்குன்றத்தில் இன்றும் காணலாம். குகையில் இருந்து நக்கீரன் காப்பாற்றப்பட்டதின் நினைவாக புரட்டாசி மாத நவராத்திரிக்கு முன், முருகனின் வேல், மலை உச்சிக்குக் கொண்டு செல்லும் விழா நடைபெறுகிறது. திருப்பரங்குன்றத்துக்கும் திருமுருகாற்றுப்படைக்கும் உள்ள தொடர்பு இதனில் விளங்கும்!
கட்டுரையாளர் : மூத்த பத்திரிகையாளர்