மார்சில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.78 லட்சம் கோடி

கடந்த மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 11.50 சதவீதம் அதிகரித்து, 1.78 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டாவது அதிகபட்ச வசூல் என்று அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உள்நாட்டில் விற்பனை அதிகரித்த காரணத்தால், கடந்த மார்ச் மாத ஜி.எஸ்.டி., வசூல், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 11.50 சதவீதம் அதிகரித்து, 1.78 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 2017ம் ஆண்டு ஜுலை மாதம் ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இதுவே இரண்டாவது அதிகபட்ச வசூலாகும். கடந்த மார்ச்சில் உள்நாட்டு பணப் பரிவர்த்தனைகள் வாயிலாக பெறப்பட்ட ஜி.எஸ்.டி., 17.60 சதவீதம் அதிகரித்தது, மொத்த வரி வசூல் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

கடந்த 2023 – 24ம் நிதியாண்டில், மொத்த ஜி.எஸ்.டி., வசூல், 20.18 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த 2022 – 23ம் நிதியாண்டு மொத்த வசூலை விட 11.70 சதவீதம் அதிகமாகும். கடந்த 2022 – 23 நிதியாண்டில் 1.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்த சராசரி மாதாந்திர ஜி.எஸ்.டி., வசூல், 2023 – 24ல் 1.68 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வாறு தெரிவித்துஉள்ளது.