‘மருத்துவ கல்வியின் தரம் உயர்த்தவே புதிய விதிகள்!’

‘மருத்துவ கல்வியின் தரத்தை உறுதி செய்யும் நோக்கத்தில், மக்கள் தொகை அடிப்படையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது’ என, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிதாக மருத்துவக் கல்லுாரிகள் துவங்குவதற்கும், மருத்துவ படிப்புக்கான இடங்களை அதிகரிப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய விதிகளை, தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. அதன்படி, மக்கள் தொகையில், 10 லட்சம் பேருக்கு, 100 மருத்துவ படிப்பு இடங்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படும். இதற்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மருத்துவக் கல்லுாரிகளும், மாணவர் சேர்க்கை இடங்களும் அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கூட, சமீபத்தில் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது.

அதைக்கருதி, 10 லட்சம் மக்கள் தொகை உடைய பகுதிகளில், 100 மருத்துவ படிப்பு இடங்கள் என்ற வரம்பை வரையறுத்து, சமீபத்தில் புதிய விதிகள் வகுக்கப்பட்டன. அதன் அடிப்டையில் பார்த்தால், மேலும், 40,000 மருத்துவ படிப்புக்கான இடங்களை, நாடு முழுதும் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த முடிவுக்கு, மருத்துவ துறையினர், தனியார் மருத்துவ சங்கத்தினர், மாணவர்கள், டாக்டர்கள் என, பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டும், வரவேற்பும் வந்துள்ளன. தரமான மருத்துவ கல்வியை உறுதி செய்வதற்காக, ஆணையத்தின் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.