மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தினரிடம் ஒரு நேர்காணல்.
உங்களுடைய குடும்பத்தைப் பற்றி…
அம்மா : எனக்கு சொந்த ஊர் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம். எனக்கு மூன்று குழந்தைகள். முதல் இருவர் மகள்கள். மூன்றாவது முகுந்த். கேரளாவில் அம்மா வீட்டில்தான் முகுந்த் பிறந்தான். கேரளாவில் வங்கி ஊழியராக பணியிலிருந்த என் கணவர் இடமாற்றம் பெற்றதால், சென்னை திருவான்மியூருக்கு வந்து விட்டோம். முகுந்த் 6ஆம் வகுப்பு வரை திருவான்மியூரில்தான் படித்தான். சிறு வயதிலேயே அவன் தன் சட்டையில் தேசியக்கொடியைக் குத்திக் கொண்டு பெருமையாகச் சுற்றுவான்.
முகுந்த் ராணுவத்திற்கு சேரப் போகிறேன் என்று கூறியதற்கு ஒரு தாயாக தங்களுடைய பதில் என்னவாக இருந்தது?
அம்மா : அதற்கு நான் வேண்டாம் என்றேன். தோஷம் பிடிக்கும்… இப்படி சில பல காரணங்களைக் கூறினேன். அவனோ, “வெளியில் சென்றால் எனக்கு பிரச்சினை வருமென்றால் நான் வீட்டில் உங்களுடனே இருக்கிறேன்” என்றான். அவன் மனதை மாற்ற நான் பல வழிகளில் முயன்றும் அவன் என்னிடம், ‘நான் என்னுடைய கொள்கையில் உறுதியாக இருக்கிறேன்; கண்டிப்பாக ராணுவத்தில் சேரப் போகிறேன்’ என்று என்னை சம்மதிக்க வைத்து விட்டான்.
முகுந்துக்கு ராணுவத்தில் சேர்வதற்கான கனவு முதலில் எப்படி வந்தது?
அக்கா ஸ்வேதா : அவனுடைய சிறிய வயதிலிருந்தே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டுமென்று விருப்பம் இருந்தது. அவனுக்குள் அது எப்படி வந்தது என்று எங்களுக்கே தெரியவில்லை. நாங்கள் விளையாடும் போதே அவன், ‘என்னுடைய உயிரை நான் தேசத்துக்காகக் கொடுப்பேன்’ என்று சொல்வான். பெரியவனானதும் இதை அவன் மறந்திருப்பான் என்று நினைத்தேன். ஆனால் ராணுவத்தில்தான் சேரப் போகிறேன் என்று சொன்னதும் நான் அதிர்ந்து போய் விட்டேன். கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தவுடன் அவனை எந்த விஷயத்திலும் கட்டாயப்படுத்துவதை விட்டு விட்டேன்.
கல்லூரி படிப்பு…
அப்பா : அந்த சமயத்தில் எனக்கு ஆலப்புழாவில் இருந்து இடமாறுதல் வந்தது. அந்த வருடம் தான் காஞ்சி மடத்தின் ஜெயேந்திர சரஸ்வதி விஷ்வ மகா வித்யாலயாவினர் கல்லூரி ஒன்றை சென்னை தாம்பரத்தில் ஆரம்பித்தனர். அதில் சேர்ந்து இவன் படிப்பு முடித்தவுடன் சென்னை கிளையை மூடிவிட்டார்கள். இவன் படிப்பதற்காகவே அந்த கல்லூரி ஆரம்பித்ததுபோல் இருந்தது.
விளையாட்டில் அவருக்கு இருந்த ஆர்வம்?
அக்கா : எங்கள் குடும்பத்தில் வாலுவே அவன்தான். எனக்கு தெரிந்த வரையில் அம்மா, அவன் பின்னாடியே ஓடிக் கொண்டிருப்பாங்க.
அம்மா : திருவான்மியூரில் குடியிருந்த பகுதியில் தொங்க விட்டிருக்கும் கயிரைப் பிடித்து ஏறுவான். இதைப் பார்த்து மற்ற குழந்தைகளும் ஏறுவதால் அந்த குழந்தைகளின் அம்மாக்கள் உங்கள் மகனைப் பார்த்துத்தான் எங்கள் பிள்ளைகளும் அதேபோல் செய்கிறார்கள் என்று புகார் செய்வார்கள்.
அக்கா : ஒரு முறை கிரிக்கெட் விளையாடும்போது அவன் நண்பன் ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டு பயந்து ஓடிப்போய் விட்டான். அந்த வீட்டில் உள்ளவர்கள் வந்து திட்டியபோது, நாங்கள்தான் கிரிக்கெட் விளையாடும்போது உடைத்துவிட்டோம் என்று தைரியமாகவும் அதேசமயம் பணிவாகவும் சொல்ல அவர்கள் சென்று விட்டார்கள். ஏண்டா இப்படி செய்ற என்று கேட்டதற்கு நீ சும்மா இரும்மா… என் நண்பனை நான் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றான். அப்போதே எதையும் துணிந்து நின்று எதிர்கொள்வான். லீடர்ஷிப் குவாலிட்டி தானாகவே அவனுள் ஏற்பட்டது.
அப்பா : எனக்கு பாஸ்போர்ட் வெரிபி கேஷனுக்குக்கூட போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக பயமாக இருக்கும். ஆனால் முகுந்த் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று அவர்களைச் சமாதானம் செய்து வைத்ததாக அவனது கல்லூரி முதல்வர் பாராட்டினார்.
ஒரு அக்கா – தம்பியாக உங்களுக்குள் நடந்த விஷயத்தைப் பற்றி கூறுங்களேன்?
அக்கா : அவனுக்கும் எனக்கும் ரஜினிகாந்த் படம் என்றால் கொள்ளை விருப்பம். அப்படி படம் பார்க்கையில் பாதியில் இது ரஜினி படம் இல்லை என்றாலும் அதை நான் பார்க்க விருப்பப்படுவேன். அப்போது இதுதான் ரஜினி படம் இல்லையே ஏன் பார்க்கிறாய்? நீ ஏன் வில் பவர் இல்லாமல் இருக்குறே என்று எனக்கே அட்வைஸ் பண்ணுவான். அவனுக்கு சிறிய வயதிலிருந்தே தண்ணீர் என்றாலே பயம். பின் அவனாகவே அந்த பயத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான் என்று அவனது நண்பர்கள் தெரிவித்தனர். இதுபோலதான் அவன் ஆரம்பத்துல இருந்தே உடலளவிலும் மனதளவிலும் அவனை தயார் பண்ணிக் கொண்டான்.
அப்பா : முகுந்தைப் போல கடலில் நீச்சல் அடிக்க முடியாது. அவ்வளவு அருமையாக நீந்துவார் என்று என்னுடைய மருமகள் என்னிடம் சொல்வார்.
ராணுவத்தில் ஏற்பட்ட அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்தது உண்டா?
அக்கா : அதெல்லாம் எங்களிடம் சொல்ல மாட்டான். இந்த வீடியோ கேம்ஸ் எல்லாம் ஏன் விளையாடுகிறான் என்று இப்போது நினைக்கிற போதுதான் ராணுவத்தில் உண்டான அனுபவங்களைச் சொன்னால் நாங்கள் பயந்து விடுவோம் என்றுதான் சொல்லவில்லை என்று தோன்றுகிறது.
அப்பா : ஒருமுறை ராணுவத்தில் அவனுடைய சக வீரர் சேப்டி கேர் இல்லாமல் துப்பாக்கி பயிற்சி மேற்கொண்ட போது, அதிலிருந்த புல்லட் எங்கேயோ பட்டு இவன் முதுகில் ஏறிவிட்டது. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சக வீரர் தண்டிக்கப்படுவார். எனவே அவனுடைய உயர் அதிகாரியிடம் தனிப்பட்ட முறையில் கூறிவிட்டு சிகிச்சைக்காக மருத்துவரான மாமனார் உதவியுடன் கேரளாவில் சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் பணியில் சேர்ந்து கொண்டான். என்னிடம் இந்த விபத்திற்கு அங்கு நான் சிகிச்சை எடுத்திருந்தால் என்னுடைய சக வீரனின் வாழ்க்கையே போய்விடும் என்றான்.
மேஜர் முகுந்த் அவனுடைய நண்பர்களிடம் பகிர்ந்த அனுபவங்கள் பற்றி…
அம்மா : முகுந்த் இறந்த பின் அவனுடைய கல்லூரி நண்பர்கள் வீட்டிற்கு வந்தார்கள். ராணுவத்தில் சேர்ந்தபோது அவனுடைய நண்பர்கள் முகுந்திடம், “செளத்தே கிடைச்சிருக்குமே! நீ ஏன் நார்த்துக்கு போக வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு முகுந்த், “அங்கதான் என்னுடைய தேவை இருக்கிறது” என்றானாம். இப்போ இந்த நார்த் – செளத் பேச்சையெல்லாம் கேட்கிறபோது வேதனையா இருக்கிறது. இந்தியா – இந்தியன் என்பதில்தான் அவனுக்குப் பெருமை.
ம.கொ.சி.இராஜேந்திரன், மாநில அமைப்புச் செயலாளர்,
தமிழ்நாடு உயர்கல்வி ஆசிரியர் அமைப்பு (THETA)
சென்னை
– தொடரும்