பொன்முடிக்கு அண்ணாமலை கேள்வி

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்ஜினியரிங் கல்லுாரிகளில் தமிழ் வழி பாடப் பிரிவு ரத்து செய்வதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்தது. பா.ஜ.க இதுகுறித்து வெளியிட்ட அறிக்கைக்கு பின், ‘ரத்து செய்யப்பட மாட்டாது’ என அமைச்சர் பொன்முடி அறிவிக்கிறார். பல்கலைக் கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக, தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன் இருக்கிறார். அப்படி இருக்கையில், எடுக்கப்படும் முடிவு குறித்து அரசுக்கு தெரியவில்லை என்றால், ஆட்சிமன்றக் குழுவில் அவர் இருப்பதில் என்ன பயன்? அரசுக்கு தெரிந்தே பாடப் பிரிவுகள் ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டது என்பதை மறைக்க, மழுப்ப பார்க்கிறார் பொன்முடி. ‘மும்மொழி கொள்கையை ஆதரிக்கிறாரா அண்ணாமலை?’ என்று கேட்டிருக்கிறார் பொன்முடி. என் மகன் படிக்கும் பள்ளியில், மூன்று மொழிகள் பயிற்று விக்கப்படுகின்றன. அவர், 20 வயதில் ஐந்து மொழிகள் கற்றிருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இதே போல பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

தி.மு.க., முதல் குடும்பத்தினரும், மற்ற தி.மு.கவினரும் நடத்தும் பள்ளிகளில், இரு மொழி கொள்கையா கடைப்பிடிக்கப்படுகிறது? மூன்று மொழிகள் என்றால், ஹிந்தி கட்டாயம் என்ற திசை திருப்பலை, தி.மு.கவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். புதிய கல்வி கொள்கையின் கீழ் மும்மொழி கற்றலில், ஹிந்தி கட்டாயம் இல்லை. ஆனால், தாய்மொழி கற்பது கட்டாயம். இத்தனை ஆண்டுகளில், முதல் முறையாக தாய்மொழி கற்பது கட்டாயமாக்கப்பட்டு இருப்பது புதிய கல்வி கொள்கையில் தான். மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த நான் தயார்; நீங்கள் தயாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.