புத்தக வெளியீட்டு விழா

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தொகுப்புகள் அடங்கிய ‘தி இண்டோமிடேபிள்ஸ்’ (THE INDOMITABLES) என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள நாரதகான சபாவில் நடைபெற்றது. தென்னிந்திய ஆய்வு மையம் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில், சென்னை வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தர் ஐசரி கே. கணேசன், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், இப்புத்தகம் எதிர்கால இளைய தலைமுறையினரை அவசியம் சென்று சேர வேண்டும். ஆகவே, இப்புத்தகம் தனது நிறுவனத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சென்று சேரும் வகையில், தனது கல்லூரி நூலகத்தில் வைப்பதாக வாக்குறுதி அளித்தார். புத்தகத்தின் ஆசிரியர் சுதாகர் நாராயணன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில், அலயென்ஸ் பப்ளிகேஷன் வெளியீட்டாளர் மற்றும் விற்பனையாளர் சீனிவாசன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பேசுகையில், இப்புத்தகத்தை தமிழாக்கம் செய்து தமிழில் வெளியிட உறுதியளித்தார். விவேகானந்தா எஜுகேஷனல் சொசைட்டியின் செயலாளர் வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதியார், ஜெய்ஹிந்த் செண்பகராமன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இப்புத்தகத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த, சுதந்திர போராட்ட வீரர்கள் 126 பேரை பற்றிய தொகுப்புகள் அடங்கியுள்ளன. மேலும், பூலித்தேவன் முதல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் வரையிலான 300 ஆண்டு வரலாறும் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.