புதிய கல்விக்கொள்கை தேவை

ஆந்திராவின் அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆச்சாரியா நாகார்ஜூனா பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட இந்தப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுமான என்.வி.ரமணாவுக்கு இந்தஃ நிகழ்ச்சியில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய அவர், “நமது நாட்டில் கல்வித் தொழிற்சாலைகள் மிக அதிகமாக புற்றீசல் போல பெருகிவிட்டன. எதிர்காலத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே கல்வி கற்பிக்கப்படுகிறது. தொழில்முறை கல்வியில்கூட வகுப்பறை பாடங்கள் மட்டுமே கற்றுத் தரப்படுகின்றன. நல்ல பணிவான தொழிலாளர்கள் தேவை என்ற காலனி ஆதிக்க கொள்கையே தற்போதைய கல்வி முறையில் உள்ளது. இதில் இருந்து நாம் வெளியேற வேண்டும். இந்த நிலைக்கு யாரை, எதை குறை சொல்வது என்பது தெரியவில்லை. கல்வி நிறுவனங்கள் எதிர்கால ஊழியர்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறிவிட்டன. இதனால் மனித வளத்தின் மதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. நிஜ வாழ்க்கையில், எதிர்காலத்தில் சந்திக்கக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்குவதாக கல்வி நிறுவனங்கள் மாற வேண்டும். இதற்கேற்ற வகையில், புதிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும். படித்து வெளியேறும் மாணவர்கள், நாட்டுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பவர்களாகவும் இந்த சமூகத்துக்கு உதவக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மோசமான சிந்தனைகளை ஏற்காதீர்கள்; அநியாயத்தை சகித்து கொள்ளாதீர்கள். மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பு அளிக்கக் கூடியவர்களாக, சிறந்த ஜனநாயகவாதிகளாக மாணவர்கள் இருக்க வேண்டும்” என பேசினார்.